ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிராந்திய மட்டத்திற்கு பரவலாக்குவது தொடர்பாக சபரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் விடயத்திற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கான ஒரு நாள் விசேட செயலமர்வு நேற்று (23) இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்தக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதி நிதியத்தின் அனைத்துப் பணிகளும் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டுள்ளதால், முன்வைக்கப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், புதிய கணினி அடிப்படையிலான ஒன்லைன் முறைமை குறித்து பிரதேச செயலகங்களின் தொடர்புடைய பணியாளர்களை தெளிவுபடுத்துதல் மற்றும் பயிற்சி அளிப்பது அவசியமாகியுள்ளது.
அதன்படி, சபரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் ஜனாதிபதி நிதியம் தொடர்பான விடயங்களைக் கையாளும் அலுவலர்களுக்கு நேற்று விளக்கமளிக்கப்பட்டது. சபரகமுவ மாகாணத்தில் ஜனாதிபதி நிதியத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், பயனாளிகளுக்கு உயர்தர சேவைகளை வழங்குதல், நவீனமயமாக்கப்பட்ட ஒன்லைன் முறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் விரைவான சேவைகளை வழங்குவதற்கு தேவையான அறிவு மற்றும் பயிற்சியை வழங்க இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே, ஜனாதிபதி நிதியத்தின் வகிபாகம் குறித்து வருகை தந்தவர்களுக்கு விளக்கமளித்தார்.
ஜனாதிபதி நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் கணினி கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு, மருத்துவ உதவி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது முதல் அங்கீகாரம் பெறுவது வரையிலான செயல்முறை மற்றும் அனுமதிக்குப் பிறகு மருத்துவ உதவி செலுத்தும் செயல்முறை குறித்து விளக்கினர்.
மேலும், விடயத்தை கையாளும் அலுவலர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது. பங்குபற்றிய அலுவலர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அலுவலக விடயத்திற்குப் பொறுப்பான அலுவலர்கள் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் பணியாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.